சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான 2- வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, நிர்வாகம், நலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான மாநாடு நடைபெறுவது வழக்கம்.
தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறையாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் (ஜூன் 29, 30) மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று (ஜூன் 29, திங்கள்) தொடங்கியது.
நேற்று நடைபெற்ற மாநாட்டில் மக்களின் அடிப்படை வசதிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதன்படி ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகளில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். அதேபோல சட்டம் -ஒழுங்கு பிரச்னைகளிலும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து 2-வது நாளாக இந்த மாநாடு தலைமைச் செயலகத்தில் முதல் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கியுள்ளது. மாலை 6 மணி வரை மாநாடு நடைபெறும்.
மாநாட்டில், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் சட்டம் – ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு, அரசுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
