முதல்வர் விஜய் திருச்சி வருகை; ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் திங்கட்கிழமை திருச்சிக்கு வருகை தர உள்ளார். தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக பரபரப்புடன் நடந்து முடிந்தது. தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் 1,19,454 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை 53,532 வாக்குகள்

வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்ற விஜய், சுமார் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின், விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தான் ராஜினாமா செய்திருந்தாலும், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும், தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த ஒட்டுமொத்த திருச்சி மக்களுக்கும் நன்றி கூற விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு (ஜூன்.1) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையிலிருந்து திங்கட்கிழமை அன்று தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி வளாகத்திற்கு வர உள்ளார்.
இந்த நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பொதுக்கூட்ட மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
