சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீச்சல் குளம் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம் வீதியை சேர்ந்த ரவி (எ)மாணிக்கம்-விசாலாட்சி தம்பதியரின் மகன் வைத்தியநாதன். விசாலாட்சி பல் மருத்துவராக உள்ள நிலையில், வைத்தியநாதன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீன நாட்டில் உள்ள சிஞ்சோவ் மாகாணத்தில் செயல்படும் சிஞ்சோங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்காக சேர்த்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியநாதன், அங்குள்ள நீச்சல் குளத்திற்கு நேற்று சக மாணவர்களோடு சேர்ந்து குளிக்க சென்றுள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றும் கருவியை நீச்சல் குள நிர்வாகம் இயக்கியதாக கூறப்படுகிறது. அதில் மாணவர் இழுத்துச் செல்லப்பட்டு அந்த சுத்திகரிப்பு இயந்திரத்தில் சிக்கி வைத்தியநாதன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்த சக மருத்துவ மாணவர்கள் வைத்தியநாதனின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு மாணவர் வைத்தியநாதனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் மீளா துயரில் தவித்து வருகின்றனர். இதனிடையே வைத்தியநாதனின் தந்தை ரவி (எ) மாணிக்கம் உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு இதுவரை தனது மகன் இறந்ததை தெரியப்படுத்தவில்லை என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.