சென்னையில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அமைச்சர்கள் கே. என். நேரு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் களத்தில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இன்று காலை வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் காலை 9 மணி அளவில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் போனில் அமைச்சர் நேருவை தொடர்பு கொண்டு வெள்ள சேதம், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் விசாரித்தார்.
முதல்வரின் உத்தரவின் போில் அமைச்சர்கள், அதிகாரிகள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் கண்காணித்து நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள். முதல்வரின் உத்தரவால் அமைச்சர்கள், அதிகாரிகளின் அயராத பணியால் சென்னை ஓரளவு பாதிப்பில் இருந்து தப்பித்து உள்ளது. இல்லாவிட்டால் 2015ம் ஆண்டில் சென்னை வெள்ளத்தில் மிதந்தது போல வெள்ளத்தில் மிதந்திருக்கும் என சென்னை மக்கள் தெரிவித்தனர்.
புயல் நிவாரணப்பணிகள் குறித்து அமைச்சர் நேரு கூறியதாவது: 24 மணி நேரமாக மழை விடாமல் பெய்து வருவதால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் உள்ளது. மழை நின்றதும் நிவாரணப்பணிகள் தொடங்கும். அதற்கான ஆயத்த பணிகளை செய்து உள்ளோம். நிவாரணப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் என்னிடம் விசாரித்தார். அவரிடம் நிலைமைகளை விளக்கி கூறினேன்’ என்றார்.