தமிழகத்தில் கடந்த 25ம் தேதி முதல் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதனை திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் போற்றும் இந்த உன்னத திட்டத்தால் குழந்தைகள் ரத்தசோகை உள்ளிட்ட பலவீனங்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் வளர்வதுடன், கல்வி கற்க தேவையான மனநிலையையும் பெறுவார்கள் என மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இந்த திட்டத்தின் சிறப்பினை உணர்ந்த தெலங்கானா அரசு தங்கள் மாநிலத்திலும் இதனை அமல்செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த மாநில உயர் அதிகாரிகள் இன்று சென்னை வந்து இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என இதன் பொறுப்பு அதிகாரியான இளம் பகவத் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலோசித்ததுடன், பல இடங்களில் காலை உணவு தயாரிப்பு, மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டனர்.
இந்த நிலையில் சேலம் பதிப்பு தினமலர் நாளிதழ் இன்று முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு வழங்கப்படுவதால் அவர்கள் பள்ளிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே கழிவறைக்கு செல்கிறார்கள். இதனால் பள்ளிகளில் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
இந்த செய்தி தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தினமலர் நாளிதழின் செய்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள கண்டனத்தில் கூறியிருப்பதாவது:
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.