திருக்குவளை பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார். பின்னர் அவர் அந்த விழாவில் பேசியதாவது:
குழந்தைகளின் வளர்ச்சியில் தான் அரசாங்கத்தின் வளர்ச்சி உள்ளது. கடந்த ஆண்டு 10 லட்சம் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 98 ஆயிரம் குழந்தைகள் போதிய ஊட்டசத்து இல்லாமல், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கான மருந்துகள் வழங்கப்பட்டது. அதில் 62 ஆயிரம் குழந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டனர்.
அந்த குழந்தைகளின் பெற்றோர் கோட்டையில் என்னை சந்தித்து வாழ்த்தினார்கள். எனவே தான் இந்த திட்டத்திற்கான செலவை, முதலீடு என்று தான் கருதுகிறேன். காலை உணவு திட்டம் எனக்கு மனநிறைவை தரும் திட்டம். இது கல்விக்காக கட்டை விரலை காணிக்கையாக கேட்ட துரோணாச்சாரியார் காலம் அல்ல. ஏகலைவன் காலம். எல்லாருக்கும். எல்லாம் கிடைக்கும்.
இந்த நேரத்தில் அதிகாரிகள், ஆசிரியர்கள், இந்த திட்டத்திற்கு சமையல் செய்வோரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக கேட்கிறேன். நீங்கள் தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தை நடத்த வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது போல தாயுள்ளத்தோடு வழங்குங்கள். வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
பள்ளிகளில் காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். படியுங்கள். கல்வி தான் யாரும் பறிக்க முடியாத சொத்து மற்ற தேவைகளை நிறைவேற்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்.
இந்தியா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றி பெற்று உள்ளது. தமிழக விஞ்ஞானி இந்த சாதனையை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார். அதுபோல நீங்களும் சாதிக்க வேண்டும். உங்கள் சாதனைகளை நானும் பார்க்க வேண்டும். அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை சென்னை அரும்பாக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திருவல்லிக்கேணியில் அமைச்சர் உதயநிதியும், திருவெறும்பூரில் அமைச்சர் மகேசும் தொடங்கி வைத்து உணவு அருந்தினர்.