Skip to content
Home » மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த (2024) ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.  பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

‘இந்தியா’ கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெறுகிறது.  கூட்டத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பைக்கு படையெடுத்து வருகிறார்கள். ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் நேற்று முன்தினமே மும்பை வந்துவிட்டனர்.

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று மாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இன்னும் சில தலைவர்களும் நேற்று இரவில் மும்பை வந்து சேர்ந்தனர்.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (31-ந் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்கிறார். இன்று காலை 9.30 மணிக்கு விமான நிலையம் வந்தார். மூத்த அமைச்சர்கள், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்திருந்து முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.9.40 மணி விமானத்தில்  முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு மும்பை சென்றார். அவருடன் டிஆர் பாலுவும் சென்றார்.  நாளை இரவு ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் வருகிறார்கள். இன்று மாலையில் கிராண்ட் ஹயாத் ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நாளை காலையில் தலைவர்களின் முறைப்படியான கூட்டம் நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூட்டணிக்கு அமைப்பாளரை நியமிப்பது மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) வெளியிடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் இரண்டு கூட்டங்களில் கட்சிகளை திரட்டி பலத்தை காட்டுவதிலேயே எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டின. ஆனால் இன்று தொடங்கும் மும்பை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய வியூகம் வகுக்கப்பட உள்ளது. இதனால் மும்பை கூட்டம் இந்தியா கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியின்  இந்த 3வது  கூட்டத்தை இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அரசியல்  நோக்கர்கள்  உற்றுநோக்கி உள்ளனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள மராட்டியத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:

மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர எதிர்க்கட்சி கூட்டணி ஒரு வலிமையான மாற்றை வழங்கும் என்று நம்புகிறேன். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பா.ஜனதா கூட்டணியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அவர் எந்த கூட்டணி பக்கம் இருக்கிறார் என்று தெரியவில்லை. எங்களது தேசியவாத காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியை விட்டு விலகி சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

சிவசேனா தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கூறுகையில், “எதிர்க்கட்சிகள் பல்வேறு கொள்கைகளை கொண்டு உள்ளன. ஆனால் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சிகளின் ஒற்றை நோக்கமாக உள்ளது” என்றார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே, “எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளருக்காக பல முகங்கள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவில் ஒருவரை தவிர வேறு யார் உள்ளார்?. மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கி விடக்கூடாது” என்றார். இந்தியா கூட்டணியின் அமைப்பாளர் யார்? என்ற கேள்விக்கு, பா.ஜனதா கூட்டணியின் அமைப்பாளர் யார்? என்று உத்தவ் தாக்கரே எதிர்கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டம் மற்றும் விவாதங்களை பொறுத்து இருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.

காங்கிரசை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் கூறுகையில், “இந்தியா கூட்டணி கூட்டத்தில் 11 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 கோடி வாக்குகள் பெற்றன. ஆனால் பா.ஜனதா அல்லாத கட்சிகள் 23 கோடி வாக்குகளை பெற்று இருந்தன. எனவே நாங்கள் ஒன்று கூடியிருப்பதன் மூலம் எங்களால் வெற்றி பெற முடியும்” என்றார். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் கிராண்ட் ஹயாத் ஓட்டலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!