அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை சேர்க்க பணம், பிரியாணி, அப்புறம் அதற்கு மேலும் சிலபல அன்ன பானாதிகள் வழங்கப்படுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் அப்போது தமிழ்நாடு கவர்னர் ரவியின் நிகழ்ச்சிக்கு ஆட்களை திரட்ட துணைவேந்தர்களும், கல்லூரி முதல்வர்களும் அரசியல் வாதிகளை விடவும் ஒரு படிமேலே சென்று விட்டனர்.
கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் ஆப்சென்ட் போட்டுவிடுவேன் என துணைவேந்தர் வேல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதற்கு அனைத்து மாணவர்களும்,. பெற்றோர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். துணைவேந்தர் பாஜக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் என கண்டம் தெரிவித்திருந்தனர்.
அதே பாணியில் இப்போது நாகையில் ஒரு கல்லூரி முதல்வர் மிரட்டல் விடுத்து ஆடியோ பதிவிட்டுள்ளார். அதில் கவர்னர் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் தேர்வு எழுத முடியாத அளவுக்கு வருகைப்பதிவேட்டில் கைவைத்து விடுவதாக கூறுகிறார். உங்களுக்கு தேர்வு எழுதுவதற்கான வருகைப்பதிவு இல்லை. நீங்கள் எப்படி தேர்வு எழுதுகிறீர்கள் நான் பார்க்கிறேன், லைப் லாங் நீங்க மீளமுடியாதபடி செய்துட்டு போயிகிட்டே இருப்பேன். என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அதாவது மாலையில் நடக்கும் கவர்னர் நிகழ்ச்சிக்கு காலை 6.30 மணிக்கு வந்து விடவேண்டும் என அவர் மிரட்டினார். ஆனாலும் அவரது மிரட்டல் எடுபடவில்லை. இதனால் நாகை தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் இளவேந்தன் டென்ஷன் ஆகிவிட்டாராம். காரணம் அவர் பணியாற்றும் கல்லூரி அதிபர் பாஜகவை சேர்ந்தவராம். இதனால் முதல்வருக்கும் கடுமையான டோஸ் கிடைத்ததாம். அவர் அதை மாணவர்களிடம் காட்டிவிட்டாராம். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கவர்னர் இப்படி ஒருநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமா? அவர் கருத்து மக்களுக்கு பிடித்தால் தானாக வருவார்களே, ஏன் ரவி, இப்படி மிரட்டி கூட்டம் சேர்க்கிறார் , கவர்னர் யாருக்கு ஓட்டு கேட்டு இப்படி பிரசாரம் செய்கிறார் என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.