Skip to content
Home » மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின் அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டு வருகிறது.

ஒரு மத வழிபாட்டுத் தலத்துக்கு அருகில் மற்றொரு மத வழிபாட்டுத்தலம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி வேணுகோபால் பரிந்துரைத்துள்ளார். ஆனால், அரபி கல்லூரியில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் 400 ஆண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது. எனவே, அரபி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மசூதி கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் பி. முத்துக்குமார் ஆஜராகி, “கல்லூரி வளாகத்தில் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மசூதி கட்டப்படுகிறது. திருப்பூரை அடிப்படையாக கொண்ட மனுதாரர் சென்னையில் மசூதி கட்டப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளைத் தொடர மனுதாரருக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொதுநல நோக்குடன் இந்த வழக்கு தொடரப்படவில்லை எனக் கூறி, 25 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!