Skip to content

குட்டையில் விழுந்த மாடு- காப்பாற்ற குதித்த பெண் பாதுகாப்பாக மீட்பு- மாடு பலி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கீழநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (45). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜெசிந்தா ஆரோக்கிய மேரி. இவர் இரண்டு பசு மாடுகளை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார். தினமும் காலையில் ஊரின் அருகே உள்ள திடலுக்கு மாடு மேய்க்க செல்வது வழக்கம். அதேபோல் கால்நடைகளை மேய்க்க ஜெசிந்தா ஆரோக்கியமேரி நேற்று ஓட்டிச் சென்றுள்ளார். இரண்டு மாடுகளில் ஒரு மாடு அருகில் இருந்த ஆண்டாள் குட்டைக்கு நீர் அருந்த சென்றுள்ளது. அப்பொழுது குட்டையின் உள்ளே தவறி மாடு விழுந்துள்ளது. இதையறிந்த ஜெசிந்தா ஆரோக்கியமேரி பதறி அடித்துக் கொண்டு மாட்டை மீட்பதற்காக குட்டையில் குதித்துள்ளார். ஆனால் குட்டை அதிக ஆழமாக இருந்ததால் மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் உயிருக்கு போராடிய ஜெசிந்தா ஆரோக்கிய மேரியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த சிவசுப்பிரமணியன் மற்றவர்கள் உதவியுடன் ஜெசிந்தா ஆரோக்கிய மேரியை உயிருடன் மீட்டார். மாடு குட்டையில் மூழ்கி விட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிவசுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் இறந்து கிடந்த மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த ஆண்டாள் குட்டை திருக்களப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது. 2024 – 2025 ஆண்டில் தூர் வாருதல் பணி மேற்கொண்ட பொழுது கரையில் இருந்து சுமார் 10 அடி ஆழத்திற்கு குட்டை வெட்டப்பட்டதால் யாரும் இந்த குட்டையை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இதில் கால்நடைகளோ அல்லது மனிதர்களோ இறங்கினால் அவர்கள் மீண்டு வர முடியாத அளவுக்கு மிகவும் ஆழமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் குட்டையை சுற்றி கரை அமைக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இது போன்ற அசம்பாவிதம் இனி நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த ஆண்டாள் குட்டையை சுற்றி கரையமைத்தோ (அ) வேலி அமைத்தோ தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
error: Content is protected !!