கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை அருகே உள்ள காமராஜர் சாலையில், சாலையோரம் அமைந்திருந்த பெரிய வாய்க்காலில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
வாய்க்காலில் அதிகளவு குப்பைகள் மற்றும் சேறு சகதிகள் இருந்ததால், அதிலிருந்து வெளியே வர முடியாமல் மாடு போராடியது.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல்

தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், வாய்க்காலுக்குள் இறங்கி மாட்டை கயிறு மூலம் கட்டினர். தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி மாட்டை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் சேறு சகதிகளை உடனடியாக அகற்றுவதுடன், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் வாய்க்காலைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
