Skip to content
Home » டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை காரில் அவர் புறப்பட்டார். பிரகதி மைதான சுரங்கப்பாதை பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பின் தொடர்ந்தது.

கார் வளைவில் திரும்பும்போது அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை முன்னால் நிறுத்தி வழிமறித்தது. 2 மோட்டார் சைக்கிளிலும் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அதில் 2 பேர் காரை நெருங்கி அதில் இருந்த சஜன்குமார் மற்றும் டிரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணப்பையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.

ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போய் இருந்தது பின்னர் தெரிய வந்தது. சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக திலக் மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!