அம்பத்தூர் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், திமுக எம்பி டி.ஆர்.பாலுவை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் அம்பத்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விரைவு ரயில் மற்றும் சில அதிவேக புறநகர் ரயில்கள், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.
இதனால், பெரம்பூர், சென்ட்ரல் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டிய நிலைமை இருப்பதால் வீண் அலைச்சல், நேர விரயம், அதிகளவில் பணம் செலவாகிறது. இதை தவிர்க்க அம்பத்தூர் ரயில் நிலையத்தில் 4வது நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை -மும்பை விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கடாபுரம் பகுதியில் கூடுதல் நுழைவாயில் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
