Skip to content
Home » திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

தென்மண்டல அளவிலான  திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக ராமநாதபுரத்தில், தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேராவூர் அருகே மிக பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் இந்த பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  தொடங்கியது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள்  பாசறைகூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்ததும் முதலில் அவர்கள் வருகை பதிவேட்டில் கையயெழுத்திட்டனர். பின்னர் அவர்களுக்கு  குறிப்புகள் எடுக்க தேவையான    டைரி, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  தலைமைக்கழக முக்கிய நிர்வாகிகள் வாக்குச்சாவடியில் முகவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்து வருகிறார்கள். மதியம்  அனைவருக்கும் அசைவ, சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற்பகலில் மேடைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முக்கிய உரையாற்றுகிறார்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக  இன்று ராமநாதபுரம் வருகிறார். இன்று காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு காரில் வரும் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக அந்தந்த பகுதி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!