Skip to content
Home » மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்… திமுக அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்… திமுக அறிவிப்பு

  • by Senthil

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 11-ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழ்நாடு முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள்
ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது; இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 11-ம் தேதி காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், கட்சி மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்படி நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்களை அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் திரட்டி ஆர்ப்பாட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!