சிறந்த புற்றுநோய் டாக்டரான மைத்ரேயன் 2000ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து அவர் 2 முறையாக ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றியவர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை,அதிமுகவில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தார்.பின்னர் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளார்.டில்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பாஜகவில் பிராமணர்களுக்கு உரிய மரியாதை இல்லை. எனவே பிராமணர்களுக்கு தனிக்கட்சி தொடங்க போகிறேன் என தற்போதும் பாஜகவில் உறுப்பினராக இருக்கும் எஸ்.வி சேகர் கூறிவரும் நிலையில் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்த மைத்ரேயன் பாஜகவில் போய் சேர்ந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.