தஞ்சையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், தஞ்சையின் பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக நாம் பணம் எடுக்க ஏடிஎம் செல்வோம். அங்கு சிறிய அளவிலான அறை அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஏடிஎம் மெஷினை பாதுகாப்பதிற்கும், பொதுமக்களுக்காவும் ஏ.சி அமைக்கப்பட்டிருக்கும். குடிநீர் வசதிகள் கூட இருக்கும். இதை தாண்டி பொதுமக்களுக்காக வேறு ஏதும் அங்கு இருப்பது அரிதே.
ஆனால் மக்கள் பணம் எடுக்க வரும் அந்த 2 நிமிடத்தில் கூட ரசிக்கும் வகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது தஞ்சையில் உள்ள ஒரு ஏடிஎம் மையம். தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை, காவிரி நகரில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தஞ்சையின் பெருமை மிக்க அடையாளங்களான, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயில், புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர்
தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் அரண்மனையில் இருக்கும் புகழ்பெற்ற தர்பார் மண்டபம், கலை சிற்பங்களுடன் கூடிய தஞ்சையின் பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு விழிப்புணர்வாகவும் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தஞ்சையின் பெருமை மிக்க அடையாளங்களை தெரிந்து கொள்ள வசதியாகவும் இருக்கிறது.
இதுகுறித்து ஏடிஎம் வரும் பொதுமக்கள் கூறுகையில், ‘எத்தனை முறை இந்த ஏடிஎம் வந்தாலும் இந்த ஓவியங்களை பார்த்து ரசிப்போம். இது தஞ்சையின் அடையாளங்களை நினைவூட்டும் வகையில் உள்ளது. குழந்தைகள் இதை பார்க்கும் போது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. மேலும் இது போன்ற ஏடிஎம் மையங்களில் தெரிந்து கொள்ள கூடிய பயனுள்ளவைகளை செய்தால் அழகாக இருக்கும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.