Skip to content
Home » காஷ்மீரில் நிலநடுக்கம்….

காஷ்மீரில் நிலநடுக்கம்….

  • by Senthil

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பு, நேபாளத்தில் நேற்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.

தொடர்ந்து நேற்று மாலை 5.18 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. கடந்த 3-ந்தேதி நேபாளத்தின் மேற்கு பகுதியில் இதேபோன்றதொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் டில்லி-என்.சி.ஆர். பகுதியிலும் உணரப்பட்டு இருந்தது. அப்போது, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இதில், சில வீடுகள் முழுவதுமோ அல்லது பகுதியாகவோ இடிந்து விழுந்தன என தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!