திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி புதிய சமத்துவபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு மின் இணைப்பு இல்லை. அங்கு மின் இணைப்பு கேட்டு அப்பகுதிமக்கள் கல்லக்குடி மின்வாரிய அலுவலகம் சென்று இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் மனு கொடுத்தனர்.
அப்போது பணியில் இருந்த இளநிலை பொறியாளர் ஸ்ரீதர், அந்த கோயிலுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாது. எல்லாம் ஆன் லைன் ஆகிவிட்டது. அந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் தான். அதற்கு மின் இணைப்பு கொடுக்கலாம் என கிராம நிர்வாக அதிகாரியிடம் கடிதம் வாங்கி, அதை தாசில்தாரிடம் கொடுத்து அவர் அதை ஓகே செய்தால் தான் மின் இணைப்பு கொடுக்க முடியும்.
இங்கே வந்து இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே, கலெக்டரிடம் போய் இதை கேளுங்கள், அவர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போடு என கேளுங்கள். உங்களுக்கு கரெண்ட் கொடுக்கத்தான் நான் இருக்கிறேன் என தடித்த வார்த்தைகளால் பேசுகிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று இளநிலை நிலை பொறியாளர் ஸ்ரீதரின் பேச்சுதான் வைரலாக உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரை எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியாமல், மின்வாரிய இளநிலைபொறியாளர் வாய்க்கொழுப்பாக பேசிய பேச்சு குறித்து அவரிடம் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்க உள்ளனர். ஏற்கனவே இந்த இளநிலை பொறியாளர் மீது பல புகார்கள் உள்ள நிலையில் இப்போது அவராகவே வந்து சிக்கி உள்ளார்.
எனவே அவர் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என தெரிகிறது.