தமிழகத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடப்பதால், மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் சோதனைகள் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர், வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. மணல் விற்பனை தொடர்பாக விசாரணைக்கு வரும்படி அதில் கூறப்பட்டு இருந்தது.
மணல் விற்பனை தொடர்பாக விசாரணைநடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என தமிழக அரசு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி பெலா திரிவேதி விசாரித்து வந்தார். அவர் இன்று பிறப்பித்த உத்தரவில், கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.