அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சேர வேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பாதிக்கும் வகையிலும், தனது சுய லாபத்திற்காக தனிப்பட்ட சமூகத்திற்காக 10.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் சட்டம் ஒன்றினை கொண்டு வந்தார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வாக்குக்காக வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் மதுரையில் அதிமுக சார்பில் அக்கட்சியில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதனிடையே காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேச தேவர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், வருகிற 20ம் தேதி அன்று மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் முன்பு முக்குலத்தோர் சமூகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமைதியான ஜனநாயக முறையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். எனவே 20 ம் தேதி அன்று காலை ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதியும், காவல்துறை பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுனா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் தங்கம் அரவிந்த் 20ஆம் தேதி மாநாடு நடைபெறுவதால், 19ஆம் தேதி முனிச்சாலை பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார் இதற்கு மனுதாரர் தரப்பில் 19 ஆம் தேதி போராட்டம் நடத்த ஒத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இவர்கள் வேண்டுமென்றே மாநாடு நடைபெறக்கூடிய நாளில் போராட்டம் நடத்த அனுமதி கூறியுள்ளனர், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அனுமதி அளிக்கக் கூடாது என வாதிட்டனர்.