கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலைய வளாகத்தில், விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் இன்று அகற்றினர்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, சுகாதார நிலை மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த டீக்கடைகள், உணவகங்கள், பழமுதிர் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள், அனுமதி பெற்ற எல்லையை மீறி நடைபாதைகள் மற்றும் பேருந்துகள் நிறுத்தும் பகுதிகளில் தற்காலிக அமைப்புகள், மேஜை, நாற்காலிகள், பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் பயணிகள் நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசலும் உருவானது.
இந்த நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் தலைமையில் ஊழியர்கள் குழுவாக வந்து, விதிமுறைகளுக்கு புறம்பாக வைக்கப்பட்டிருந்த கடை அமைப்புகள் மற்றும் பொருட்களை அகற்றினர். முன்னதாக கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், மீண்டும் விதிமீறல் தொடர்ந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் பேருந்து நிலைய வளாகம் சீராகி, பயணிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வசதி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இனிவரும் காலங்களில் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
