சென்னை விமான நிலையத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற வெளிநாட்டு நபர்கள் போலியான இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பிடித்து சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அளித்த தகவலின்படி, சென்னை ராயபுரத்தை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் (54) என்பவர் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதற்காக 5 லட்சம் வரை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. முகமது ஷேக் இலியாசை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்ய திருவொற்றியூரை சேர்ந்த சிவகுமார் (43), ராயபுரத்தை சேர்ந்த முகமது புகாரி (42) ஆகியோருடன் இணைந்து, இலங்கை, வங்கதேசம், பிரிட்டன் போன்ற நாடுகளின் போலி பாஸ்போர்ட்கள், போலியான விசா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. . அவர்களிடம் இருந்து போலியான பாஸ்போர்ட்கள், பாஸ்போர்ட் பேப்பர்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்டாம்ப் இயந்திரம், 2 செல்போன் என மொத்தம் 160 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.