சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று இன்று அதிகாலை சென்றது. இந்த பேருந்தில் நேரு என்பவர் நடத்துநராக செயல்பட்டு வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென பேருந்தில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில், பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது. பயணிகள் அனைவரிடமும் இருந்த டிக்கெட்டுகள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்த டிக்கெட் பரிசோதகர்கள், நடத்துநரிடம் பழைய டிக்கெட்டுகள் எப்படி பயணிகளிடம் வந்து என கேட்டனர்.

அதற்கு நடத்துநர் சரியாக பதில் கூறாததால், நடத்துநரின் பையை வாங்கி பார்த்தபோது, பொதுமக்களிடம் ஏற்கெனவே விற்பனை செய்த பழைய டிக்கெட்டுகளை அவர்களிடமிருந்து வாங்கி, புதிய பயணிகளுக்கு பழைய டிக்கெட்டுகளை நடத்துநர் கொடுத்தது தெரியவந்தது. டிக்கெட் பரிசோதகரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட நடத்துநரை பணியில் இருந்த விடுவித்த டிக்கெட் பரிசோதகர்கள், மாற்று நடத்துநரை வரவழைத்து பேருந்தை இயக்கினர். இந்த மோசடி குறித்து டிக்கெட் பரிசோதகர்கள் சேலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தகவல் கொடுத்த நிலையில், நடத்துநர் நேரு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.