தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). சமையல் ஒப்பந்ததாரர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும், திருபுவனம் பாக்கு விநாயகன் தோப்புத் தெருவில் மத மாற்ற பிரசாரம் செய்ததாக சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அன்று இரவு ராமலிங்கம் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து திருபுவனம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சர்தார்கான் மகன் நிஜாம் அலி (45) உள்பட சிலரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்தார்கான் (73) கடந்த 10ம் தேதி இரவு இறந்தார். தகவலறிந்த, நிஜாம் அலி தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக நேற்று பரோலுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு பரோல் கிடைத்ததை அடுத்து வீட்டுக்குச் சென்று தந்தையின் உடலை அடக்கம் செய்தார். இதற்காக திருபுவனத்தில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிஜாம் அலிக்கு நாளையுடன் பரோல் முடிகிறது. இதனால் 15ம் தேதி காலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.