ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த ஜூன் 19-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட விடுதலைப் பத்திரங்களை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக ரூ.30,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேச்சுவார்த்தையில் அந்த தொகையை ரூ.27,000-ஆகக் குறைத்துக் கேட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த விசாரணையில், பெண் உதவியாளர் மகாலட்சுமியின் உத்தரவின் பேரில், அருகே உள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் சிக்கந்தர் என்ற நபர் ரூ.27,000 லஞ்சப் பணத்தைப் பெற்றது கச்சிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்த லஞ்சப் பணம் முழுவதையும் பறிமுதல் செய்த போலீசார், லஞ்சம் வாங்க உடந்தையாக இருந்த சிக்கந்தர் மற்றும் லஞ்சம் கோரிய அரசு அலுவலக பெண் உதவியாளர் மகாலட்சுமி ஆகியோரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
