கரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளுக்கான கூண்டு கட்டுமானத் தொழிலில் முக்கிய மையமாக விளங்கி வரும் நிலையில்,
கரூர் கோவை சாலையில் செந்தில்நாதன் என்பவர் நடத்தி வரும் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் நிறுவன ஊழியர்கள் முதலில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர், மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகளின் மூலம் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் மூன்று பேருந்துகள் மற்றும் பேருந்து கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் தீயில் கருகி சேதமடைந்து.
மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளித்தது.
முதல் கட்ட விசாரணையில், பேருந்து கூண்டு கட்டுமான நிறுவனம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை அருகில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததே இந்த விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கருப்பம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
