கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக இருப்பதால், குறைந்த அழுத்த மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைத்து அங்குள்ள விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றி, மின்கம்பங்களை எடுத்துச் சென்று அங்கு நிறுவினர். 16 கேவிஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றி அங்கு நிறுவப்பட்டு அதிலிருந்து அருகில் உள்ள சாமிநதான் என்ற விவசாயிக்கு மும்முனை விவசாய
மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை திறந்து வைத்து, இயக்கி வைக்க அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோவிற்கு அழைப்பு மின்வாரியம் மூலம் விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பினை ஏற்ற அவர் இன்று அதனை துவக்கி வைக்க வருகை தந்தார். அவருக்கு அப்பகுதி திமுகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அழைத்தனர். பின்பு, மின்மாற்றி இருக்கும் இடம் வயக்காட்டு பகுதி என்பதாலும், காரில் சென்றால் காரை திருப்ப முடியாது என மின்சார வாரிய அதிகாரிகள் அவரிடம் எடுத்துரைத்து சுமார் ஒன்றரை கி.மீ நடந்தே அழைத்துச் சென்றனர். பள்ளபாளையம் ராஜ வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் அந்த வாய்க்கால் வழியாகவும், விவசாய பணிகள் நடந்து கொண்டிருக்கும் வயலில் வரப்பிலும் நடக்க வைத்து அழைத்துச் சென்றனர்.
செல்லும் வழியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் நின்று பெண்களுக்கான உரிமைத் தொகைக்காக 1 ரூபாய் அனுப்பியது வந்து விட்டதா என கேட்டார். யாரும் வரவில்லை என கூறினர். ஒரு வார காலத்திற்கு வந்துவிடும் என கூறிவிட்டுச் சென்றார். பிறகு, அங்கு புதிய மின்மாற்றிக்கு மாலை அணிவித்தும், ரிப்பன் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த மின்மாற்றியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்பு, மின்மாற்றியிலிருந்து புது மின்சாரம் இணைப்பு பெற்ற பயனாளிக்கு மின்நுகர்வோர் அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மின்வாரிய அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு, மீண்டும் ஒன்றரை கி.மீ தூரம் போன வழியிலேயே திருப்பி அழைத்து வந்தனர் மின்சார வாரிய அலுவலர்கள்.