கோவை, வீரகேரளம் பகுதியில் சாலை ஓரமாகக் கடை நடத்தி வந்த 53 வயதுடைய முதியவர் மணி மீது, கார் ஒன்று அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் பறந்து சென்ற கொடூர விபத்தின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கோவை, வீரகேரளம் பிரதான சாலைப் பகுதியில், 53 வயதுடைய முதியவர் மணி என்பவர் சாலையோரமாகச் சிறிய தற்காலிகக் கடை ஒன்று அமைத்து வியாபாரம் செய்து வந்து உள்ளார். நேற்று தனது கடையின் முன்பு அவர் நின்று கொண்டு இருந்த போது, அந்த வழித் தடத்தில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த முதியவர் மீது பயங்கரமாக மோதியது.
காரின் வேகம் மிகக் கொடூரமாக இருந்ததால், அதன் பின் பகுதி மோதிய வேகத்தில் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் அலறி உள்ளார். ஆனால், விபத்தை ஏற்படுத்திய அந்தக் காரின் ஓட்டுநர், மனிதாபிமானமே இன்றி வண்டியை நிறுத்தாமல், “மின்னல் வேகத்தில்” அங்கு இருந்து காரை ஓட்டிச் சென்று தப்பியோடி விட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் அருகில் இருந்த கடைக்காரர்கள், பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரை மீட்டு, அவசர, அவசரமாகக் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தக் கொடூர விபத்து அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, விபத்தின் பகீர் காட்சிகள் அப்படியே பதிவாகி இருந்தது தெரியவந்தது.
முதியவர் மீது கார் மோதும் கொடூரமான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
