அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு 2023-24 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றிற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலுக்கு வெளியே நிற்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்ட யானையின் ராட்சத நாயக்கர் கால சிற்பத்தினை பார்வையிட்டனர்.அந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு செல்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் (சென்னை) சத்தியமூர்த்தி, திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் வள்ளுவன், செயற்பொறியாளர் மணிவண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.