Skip to content
Home » வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Senthil

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

கடந்த டிசம்பர் 31-ந்தேதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரூபேஷ்குமார் வந்தார். அப்போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வடமாநிலத்தில் இருந்து வந்த ரெயில் மூலம் திருப்பூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ரூபேஷ்குமாரை சந்தித்த அந்த சிறுமி, தனக்கு படிப்பு வராததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலை தேடி தனியாக திருப்பூர் வந்துள்ளதாக கூறியுள்ளார். இங்கு வேலை ஏதும் கிடைக்குமா? தொழில் சார்ந்த நிறுவனங்கள் எங்கு உள்ளன என கேட்டுள்ளார்.

ரூபேஷ்குமார், அந்த சிறுமியின்  நிலையை தெரிந்து கொண்டு,  நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன். தங்கும் வசதியும் செய்து தருகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி அங்கிருந்து காங்கேயம் சிவன்மலை பகுதியில், தான் தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சிறுமியை அழைத்து வந்துள்ளார்.

பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் பேசி புதிதாக ஆட்கள் வந்துள்ளனர். எனவே இன்னொரு வீடு வாடகைக்கு வேண்டும் என கூறி பக்கத்து வீட்டின் சாவியை வாங்கி அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை கொண்டாட கேக் வெட்டலாம் எனக் கூறி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்துள்ளனர்.  பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி மது அருந்த மறுக்கவே, மதுபானம் கலந்த குளிர்பானத்தை ஊற்றி கொடுத்துள்ளனர். அதனை குளிர்பானம் என நினைத்து குடித்த அந்த சிறுமி சில நிமிடத்தில் மயக்கமடைந்துள்ளார்.

இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட ரூபேஷ்குமாரும், நிதிஷ்குமாரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் அங்கு வந்துள்ளார். உடனே நிதிஷ்குமார் மற்றும் ரூபேஷ்குமார் ஆகிய இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நிதிஷ்குமார் மற்றும் ரூபேஷ் குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!