உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை தமிழகம் தெய்வப்புலவராக போற்றி வருகிறது. எல்லா மதங்களும் ஏற்கும் கருத்துக்களை அவர் சொல்லியிருப்பதால் அவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எந்த மதக்குறியீடும் இல்லாத வயைில் திருவள்ளுவருக்கு தமிழக அரசு உருவப்படம் வெளியிட்டு உள்ளது. சிலைகளையும் நிறுவி உள்ளது.
ஆனால் பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி உடை கட்டுவதை சமீபகாலமாக செய்து வருகிறார்கள். அதாவது தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான போக்கை சமீப காலமாக அவர்கள் செய்து வருகிறார்கள்.
திருவள்ளுவர் தினமான இன்று தமிழ்நாடு கவர்னர் ரவி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் காவி உடை அணிந்த வள்ளுவர் படத்தை வெளியிட்டு உள்ளார். அத்துடன் , வள்ளுவரின் நெற்றி, கைகளில் விபூதியும் இட்டுள்ளார். அந்த படத்துடன் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவியான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். திருவள்ளுவரின் ஞானம், நமது தேசத்தின் கருத்துகள், அடையாளத்தை செழுமைப்படுத்தியது என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக்காரர்கள் காவியுடன் விட்டு விடுவார்கள், ரவி விபூதியும் இட்டு வாழ்த்து தெரிவித்திருப்பது, தமிழக அரசுடன் கவர்னர் தொடர்ந்து மோதல் போக்குடன் இருப்பதையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே அவர் தமிழ்நாட்டை தமிழ்நாடு என அழைக்க கூடாது, தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று தான் நடத்திய விழா அழைப்பிதழில் தமிழகம் என்று அச்சிட்டு பார்த்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அதை கைவிட்டார். இப்போது வள்ளுவருக்கு காவி கட்டி உள்ளார்.