பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும் மக்கள் அரசுப் பேருந்துகளை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் பல்வேறு வகையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குளிர் சாதன பேருந்துகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் அதிகம் பயணிகள் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகை அல்லாத சாதாரண நாட்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில், 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி ஜனவரி
மாதத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்தவர்களில் பரிசுக்கு உரியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் முன்பதிவு செய்து அரசு பேருந்துகளில் பயணித்தவர்களின் பட்டியலில் இருந்து மூன்று பயணிகளை கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தேர்வு செய்தார். எஸ். இசக்கி முருகேசன், கே. சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய 3 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.