Skip to content
Home » வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Senthil

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 41). தனியார் நிறுவன ஊழியர். தமிழ்செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில், பிற்பகல் நேரத்தில் பக்கத்து தெருவில் வசிக்கும் தமிழ்செல்வனின் தாய் ராஜாமணி தனது மகன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே இதுகுறித்து தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றார்.

பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 29 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வன் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான நபரின் கைரேகை சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீளமேடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சமீப நாட்களாக செயின் பறிப்பு, வீடு புகுந்து நகை திருடுவது அதிகரித்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!