தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அனந்தலட்சுமி (56 ). கடந்த 22ம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அனந்த லட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர்.
தொடர்ந்து இத்தகவல் அனந்தலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடன் கோவையிலிருந்து புறப்பட்டு தஞ்சை வந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பதினாறே முக்கால் பவுன் தங்க நகைகள், 15 கிராம் வைர நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அனந்தலட்சுமி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.