திருச்சியில் பயங்கரம்… கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல் – 4 பேர் கைது..
திருச்சி பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ், இவரது உறவினர் ஜெகநாதன், இருவரும் நேற்று முந்தினம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அவர்களது வீட்டுமுன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும் அந்த பகுதியில் சிலர் கஞ்சா மற்றும் போதை ஊசி மாத்திரைகள் பயன்படுத்துவதாகவும் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் அப்பகுதியை சாராத வெளிநபர்கள் 4 பேர் மாரியம்மன் கோவில் தெரு வழியாக வந்துள்ளனர்.
அப்போது நாகராஜ் மற்றும் ஜெகன்நாத் இது குறித்து 4 பேரிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 பேரும் இங்கேயே இருங்கள் உங்களை வெட்டி கூறு போடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றனர்.
பின்பு சிறிது நேரத்தில் அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்து அங்கு வீட்டு முன் அமர்ந்திருந்த நாகராஜ் மற்றும் ஜெகன்நாத் இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் நாகராஜ் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெகன்நாத்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நாகராஜ் மற்றும் ஜெகன்நாத்தை வெட்டியது ஷாருக்கான், மெல்வின் மோகன், ஜப்ரான், ரோஹித் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் ஷாருக்கான் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். தலைமறைவாகி இருந்த மற்ற 3 நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த 3 நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
