கர்நாடகத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெங்களூருவுக்கு இன்றிரவு வரும்படி காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டு உள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்களை பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆலோசனையில் முதலில், தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத சூழலில், எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்தில் சிக்கி விடாமல் பாதுகாக்க ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு அழைத்து செல்ல கட்சி பரிசீலனை செய்து வந்தது. ஆனால், காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக பாஜக , மஜத மற்றும் சுயேச்சைகள் எல்லோரும் சேர்ந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் எம்.எல்.ஏக்களை வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்லவேண்டாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்து விட்டது. பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட்டிலேயே தங்க வைப்பது என்று கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது. மராட்டிய தேர்தலில், நடந்தது போன்ற சூழலை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பெங்களூருவின் சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஹில்டன் ஓட்டலுக்கு அவர்கள் கொண்டு செல்லப்படலாம் என்றும் வேறு சிலர், பிடதி நகரில் உள்ள ஈகிள்டன் தங்கும் விடுதிக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறுகின்றனர். குதிரை பேரம் ஏற்படாமல் தடுப்பதற்காக 50 அறைகளை காங்கிரஸ் கட்சி முன்பதிவு செய்து விட்டது என்றும் கூறப்படுகிறது.