கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய ‘சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வு முடிந்த பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் பேசிய, நடிகைகளைத் தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன் என்றார்.
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: “புகழும், விளம்பரமும் நல்ல முயற்சியில்தான் வர வேண்டும். தீய செயலால் வளரமுற்பட்டால் அது வளர்ச்சி கிடையாது. இளைஞர்கள் நல்ல விதமாக வளர முயற்சிக்க வேண்டும். நடிகைகளை ஆபாசமாக சித்தரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மனிதகுல வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை தவறாகப் பயன்படுத்துவதை பெண்மைக்கு செய்யப்படும் இழிவு என நினைக்கிறேன். கலையுலகச் சகோதரிகளுக்கு ஏற்படக்கூடிய தலைகுனிவு என்று நினைக்கிறேன். எந்தவொரு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கும் ஒரு தீமை உண்டு. அதைக் கடந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக வளர்ந்து வரும் பட்சத்தில் உலகம் இரண்டாக பிளவுபடும்” என்றார்.