புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக் கொண்டு, சட்டவிரோதமாக வாக்கு செலுத்திய தாய் மற்றும் மகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (70) மற்றும் அவரது மகள் ரீனா நந்தினி (45). இவர்கள் இருவரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இந்தியச் சட்டப்படி இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதியில்லை என்பதால், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இங்கு வாக்களிக்க முடியாது. ஆனால், அதனை மறைத்து இவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்கு செலுத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரும் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கினர். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் இவர்கள் இருவர் மீதும் முறைப்படி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து தற்போதும் புதுச்சேரியிலும் இது போன்ற போலி வாக்குப்பதிவு வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
