பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜவுக்கு எதிராக உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உரிய முக்கியத்துவம் நிதிஷ்குமாருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும், அதை நிதிஷ் குமார் மறுப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணிக்கு மீண்டும் நிதிஷ் குமாரை வரவேற்போம் என்று ஒன்றிய சமூக நீதித் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்தார். இந்நிலையில், பீகாரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோா் பங்கேற்ற மோதிகாரி மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், முதல்வர் நிதிஷ் குமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைய முட்டுக்கட்டைகள் இருந்தன.
ஆனால், 2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் (பிரதமர் மோடி பதவியேற்பு) பிறகு பணிகள் நடைபெற்றன’ என்று கூறினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, நிதிஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.