Skip to content
Home » ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

டில்லியில் நேற்று  ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணி அமைத்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில்

‘இந்தியா‘ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம்  ஏற்கனவே பாட்னா, பெங்களுூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை முன்னிட்டு இந்த கூட்டணியின் கூட்டம் 4 மாதங்களுக்கு பின்னர் டிச. 6ம் தேதி டில்லியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டணியில் உள்ள அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம் டில்லி அசோகா ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி  பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் , உத்தவ் தாக்கரே, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நேற்று வரை பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 92 எம்பிக்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று மட்டும் 78 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் இருந்து 33 பேரும், மாநிலங்களவையில் இருந்து 45 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்தும் முதலில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனை கண்டித்து டிசம்பர் 22ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து  இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கே பெயரை  மம்தா பானர்ஜி,   கெஜ்ரிவால் ஆகியோர் பரிந்துரைத்தனர். இதனை  ஏற்க கார்கே மறுத்துவிட்டார். எனவே தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

அடுத்ததாக ஜனவரி 2வது வாரத்தில் தொகுதி பங்கீடு  செய்து பிரசாரத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து முடிவு செய்ய,  மேற்கு வங்கத்துக்கு திரிணாமுல் காங்கிரசும், தமிழ்நாட்டுக்கு திமுகவுக்கும், டில்லிக்கு ஆம் ஆத்மியும்,  உபிக்கு  சமாஜ்வாதியும்,  பொறுப்பு ஏற்பது என்ற தீர்மானத்தை மம்தா கொண்டு வந்தார். அதுவும் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!