Skip to content
Home » ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

  • by Senthil

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்று 3ம் நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின.  7ம் தேதி காலை காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தரைவழி, வான்வழி, கடல்வழியாக ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். ஆபரேஷன் அல் அக்சா வெள்ளம் (தூரத்தில் இருந்து வரும் வெள்ளம்)என்ற  பெயரில் காசா முனை அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள நகங்களுக்குள்  கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.அதே நேரத்தில்  வான்வெளி தாக்குதலும் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்தனர். இஸ்ரேலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய ராணுவ தளத்தையும் கைப்பற்றினர். இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், குழந்தைகள், பெண்கள் என பலரையும் பிணை கைதிகளாக சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைகைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்கு கொண்டு சென்றனர்.

வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்யும் வீடியோக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சமூகவலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. மேலும், இளம்பெண்ணை கொலை செய்து அவரது உடலை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 413 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவுக்கான மின்சாரம், எரிபொருள், பிறபொருட்கள் வினியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. மேலும், காசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 3ம் நாளாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!