பொங்கல் திருநாளையொட்டி உலக பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காைல 7 மணிக்கு தொடங்கியது. இதில் 1000 காளைகள் களம் இறக்கப்படுகிறது. 600 வீரர்கள் களம் காண பெயர் பதிவு செய்து உள்ளனர். 12 சுற்றுகளாக போட்டிகள் நடக்கிறது. ஒவ்வொரு சுற்றும் 1 மணி நேரம் நடைபெறும். இதில் தலா 50 வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள்.
மதியம் 2.15 மணி வரை 7 சுற்று போட்டிகள் நிறைவடைந்தன. இதில் 591 காளைகள் களம் கண்டன. 350 வீரர்கள் களத்தில் புகுந்து தங்கள் வீரத்தை காட்டினர். காளைகள் முட்டி தள்ளியதில் 45 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் போலீசார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்களையும் காளைகள் பதம் பார்த்தன. இவர்களில் 9 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த போட்டியில் ஒரே ஒரு காளை மட்டும் காலில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் விழுந்தது. அந்த காளையை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் 7 சுற்றுகள் வரை 16 காளைகளை அடக்கி நம்பர் 1 இடத்தில் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 2ம் இடம் பிடித்தார். 2022ல் முதலிடம் பிடித்த வீரர்.
அடுத்ததாக அவனியாபுரம் ரஞ்சித்குமார் 14 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். தேனி மாவட்டம் சீலையாம்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி 3ம் இடத்தில் உள்ளார். தற்போது 8ம் சுற்று போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு 12ம் சுற்று வரை தொடர்ந்து போட்டிகள் நடைபெறும். ஒட்டுமொத்தமாக அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு கார், பசுமாடு உள்ளிட்ட பல பரிசுகள் காத்திருக்கிறது.
அவனியாபுரதை்தை சேர்ந்த கார்த்திக், ரஞ்சித் குமார் இடையே தான் முதலிடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
8வது சுற்றில் மொத்தம் 30 வீரர்கள் மட்டுமே இறக்கப்பட்டனர். 9வதுசுற்றில் 55 பேர் இறக்கப்பட உள்ளனர்.