Skip to content
Home » ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பஸ் கண்டக்டர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.  இந்த காதல் ஜோடி கடந்த 4ம் தேதி  திருச்சி அடுத்த  முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு  சென்றனர். அங்கு அவர்கள் தனிமையாக  ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது  அங்கு திருச்சி மாவட்ட காவல் தனிப்படையை சோ்ந்தவரும், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பயிற்சி  எஸ்.ஐயாகவும் பணியாற்றும்  பாலன் என்பவரது மகன் சசிகுமாா் (28), நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றும்  போலீஸ்காரர் சங்கா் ராஜபாண்டியன் (32), நவல்பட்டு காவல் நிலைய காவலா் பிரசாத் (26), ஜீயபுரம் காவல் நிலைய காவலா் சித்தாா்த்தன் (30) ஆகிய நான்கு பேரும் சாதாரண உடையில்  அங்கு நின்றிருந்தனர். இவர்களுக்கு அங்கு பணியில்லை.  ஆனால் இவர்கள் காரில் வந்து அங்கு  வெகுநேரமாக காத்திருந்தார்களாம்.  கழிவறைக்கு மேல்புறம் உள்ள  மேடான  பகுதியில் ஒரு மரத்திற்கு அருகில் நிறுத்தி இருந்தனர்.

 இவர்கள் கண்ணில் காதல்ஜோடி பட்டது.  காதல் ஜோடியை அவர்கள் பிடித்து, தாங்கள் போலீஸ்எனக்கூறி காதலனை  தாக்கினர். பின்னர் காதலியை விசாரிக்க வேண்டும் எனக்கூறி, தங்களின் காரில் ஏற்றி கதவை சாத்திக்கொண்டனர்.   அந்த பெண்ணுடன் எஸ்.ஐயும் இன்னொரு போலீஸ்காரரும் காரில் ஏறிக்கொண்டு, காதலிக்கு  பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். முத்தம் கொடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை பல்வேறு கோணங்களில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். பின்னர் காதலனை பிடித்து வைத்திருந்த 2 போலீஸ்கார்களும் காருக்குள் ஏறி அதே பாணியில்  நடந்துள்ளனர். அத்துடன் இனி எப்போது கூப்பிட்டாலும் எங்களுடன் வரவேண்டும். இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் ஏற்றி விடுவோம். உன் காதலனையும் சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டி போன் நம்பரையும் வாங்கி உள்ளனர்.

சுமார் 2 மணி நேர பாலியல் சித்ரவதைக்கு பின்னர் அவர்களை விரட்டி விட்டனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் தொலைத்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட  காதல்ஜோடி முக்கொம்பு மெயின் நுழைவு வாயிலில் உள்ள போலீசாரிடம் வந்து கூறி உள்ளனர். அதற்கு அவர்கள்  எங்களுக்கு இதுபற்றி தெரியாது. போலீஸ் நிலையம் போய் புகார் செய்யுங்கள் என  பொறுப்பை தட்டிக்கழித்து விட்டனர்.  ஆனாலும் அந்த காதல்ஜோடி துணிந்து ஜீயபுரம் போலீஸ் நிலையம் வந்து புகார் செய்தனர்.  இது குறித்து , மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் தலைமையில், காவல் அதிகாரிகள் கொண்ட தனிப்படையினா் விசாரித்தனா். இதில், காதலி கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்தது.

இதையடுத்து, எஸ்ஐ. சசிகுமாா் உள்ளிட்ட 4 போ் மீதும், போக்சோ பிரிவு மற்றும் சிறுமியை மிரட்டியது, பாலியல் தொல்லை அளித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து நால்வரையும் நேற்று கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். 

இவா்களில் சசிக்குமாா் ஜீயபுரத்தையும், சங்கர்ராஜபாண்டியன் புதுக்கோட்டை பெரியார் நகரையையும், பிரசாத் மற்றும் சித்தாா்த் இருவரும் கடலூா் மாவட்டம் குறிஞ்சிபாடியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் வழக்கமாக இதே போல பல பெண்களிடம்  இப்படி நடந்து கொண்டதாக  கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சிவில் உடையில் முக்கொம்பு பூங்காவில் சுற்றுவார்களாம்.  எனவே இவர்களை போக்சோவில் அடைத்ததுடன் விட்டு விடாமல், இதுவரை எத்தனை பெண்களிடம் இதுபோல நடந்தார்களா என விசாரிக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 15 வருடங்களுக்கு முன் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், காதலனுடன் வந்த  ஒரு மாணவியை கடத்திச்சென்று  பலாத்காரம் செய்தார். பின்னர் அவர்  பெயரளவுக்கு சிறைக்கு அனுப்ப்பட்டார். சில காலத்தில் விடுதலையாகி  வந்து விட்டார். அதுபோல இல்லாமல் இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!