சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் அஜித்குமார் (27). திருமணமாகாத இவர், அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்பவரது நகைகள் திருடுபோய்விட்டன. இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமார் உள்ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பின்னர், அஜித்குமாரை நேற்று முன்தினம் விடுவித்தனர். வெளியே வந்த அவரை மீண்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அஜித்குமாரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக அஜித்குமாரின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அஜித்குமாரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்குமாரை கொன்ற காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது, அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை திமுக பிரமுகர் ஒருவரது காரில் ஏற்றி, உடலை வாங்குவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையிலான கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், அஜித்குமாரின் தாயார், சகோதரரை காவல் துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அஜித்குமார் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. . இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, “உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினரா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், “சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை?” என்று குறிப்பிட்ட நீதிபதிகள் சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், கடந்த 4 ஆண்டுகளில், 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.