கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி பாமகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், போலீசார் மீது கல்வீசினர். அவர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நெய்வேலியில் வன்முறை வெடித்து போராட்டக் களமாக மாறியது. போலீசார் தடியடி கண்ணீர் புகை கொண்டு வீச்சு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அண்டை மாவட்ட போலீசார் நெய்வேலி விரைந்துள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு, அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாமகவின் என்.எல்.சி முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து, போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.