Skip to content
Home » கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

இதனால் உரிய நீரை வழங்க கோரியும், கர்நாடக மற்றும் காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக உரிய நீரை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்க கூடாது. மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க கூடாது போன்ற கோஷங்கள் எழுப்பியவாறே ரயிலை மறித்து போராட்டம் நடத்துவதற்காக தஞ்சை ரயில் நிலையத்துக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில விவசாயிகள் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து தண்டவாளத்தில் நின்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மேலும் ரயிலை மறிக்க முயன்றதாக காவிரி விவசாய சங்க நிர்வாகிகள் 75-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தஞ்சை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!