தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக டெல்டா பகுதிகளில் போராட்டம் வலு அடைந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு விவசாய அமைப்புகள் என நூதன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவில் ரயில் நிலையம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தமிழகத்திற்கு குறுவைக்கும் சம்பா சாகுபடிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தாத மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதி உத்தமர் கோவில் ரயில் நிலையம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள்
கடலூரில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகளை ஈடுபட விடாமல் அனைவரையும் கைது செய்தனர். மூன்று பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.