Skip to content
Home » சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சரயுவிற்கு புகார் வந்ததை அடுத்து இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர், வட்டார மருத்துவ அலுவலர், போலீசார், வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழு ஆய்வு செய்தனர். அவர்கள் காவேரிப்பட்டிணத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் ரகசியமாக விசாரணை செய்தனர். அதில் அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 3-வதாக கர்ப்பமாகி மூன்றரை மாதங்கள் ஆன நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வேடி என்ற இடைத் தரகர் மூலமாக ஸ்கேன் டெக்னீசியன் சுகுமாரன் என்பவர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை பெண் என கண்டுபிடித்தது தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த பெண் காவேரிப்பட்டிணம் கொசமேடு எம்.எஸ். நகரில் உள்ள உமாராணி என்பவரிடம் மாத்திரைகள், உபகரணங்கள் மூலம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் காவேரிப்பட்டிணம் எம்.எஸ். நகரில் வசிக்கும் உமாராணி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இதில் கருக்கலைப்பு செய்வதற்கான ஆதாரங்களை கைப்பற்றினார்கள். மேலும் அவரது வீட்டு அருகில் 3 பேர் இருந்தனர். அவர்களை அதிகாரிகள் விசாரித்த போது ஒருவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி என்பதும் கருக்கலைப்பு செய்வதற்காக காத்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை அறிந்த உமாராணி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் பேராணம்பட்டு அருகே விசமங்கலம் அருகில் ஒரு வீட்டில் 5 கர்ப்பிணிகள் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்கேன் செய்வதற்காக காத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களுடன் 3 இடைத்தரகர்களும் இருந்தனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.29 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். மேலும் ஆன்லைன் மூலமும் ரூ.18 ஆயிரத்து 500 புரோக்கர் வேடிக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து இடைத்தரகர்கள், கர்ப்பிணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வேடி மற்றும் ஸ்கேன் செய்யும் சுகுமாரன் மற்றும் கருக்கலைப்பில் ஈடுபட்ட உமாராணி தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!