திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதி கருமண்டபம். இங்கு ஆரோக்கியமாதா மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரையில் செயல்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகளை அழைத்து வர இந்த பள்ளிக்கு பஸ்கள் உள்ளது. அருகில் உள்ள மாணவர்கள் ஆட்டோக்களிலும், பெரும்பாலானவர்கள் நடந்தும் பள்ளிக்கு வருகிறார்கள்.
ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பின்னர் கடந்த 12ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு அதிர்ச்சி. பள்ளி இருக்கும் சாலை சுனாமியில் சிக்கி சின்னாபின்னமாக கிடந்தது போல சாலை முழுவதும் கோரமாக காட்சி அளித்தது.
காரணம், அந்த பள்ளி அமைந்துள்ள சாலையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு, சாலை முழுவதும் அந்த சேற்றை கொட்டி உள்ளனர். இந்த சேறு காய்ந்து சாலை முழுவதும் இப்போது குண்டும்,
குழியுமாக இருக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பஸ்களில் வரும் குழந்தைகளை திண்டுக்கல் மெயின் ரோட்டிலேயே இறக்கி விட்டு விடுகிறார்கள். ஆட்டோவும் அந்த சாலையில் வருவதில்லை.
எனவே குண்டும் குழியுமான சாலையில் எல்கேஜி குழந்தைகள் முதல் பிளஸ்2 படிப்பவர்கள் வரை அனைவரும் நடந்து தான் செல்ல வேண்டும். சுமார் 100 மீட்டர் தூரம் அவர்கள் புத்தகப்பை, மற்றும் மதிய உணவு பைகளுடன்
நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சின்ன குழந்தைகளை பெற்றோர் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு செல்கிறார்கள். இதற்கிடையே டூவீலா்கள் சீறிப்பாய்ந்து வருவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பதறியடித்து செல்கிறார்கள்.
ஒன்றரை மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நேரத்தில் இந்த சாலை பணியை செய்திருந்தால் இப்போது குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருந்திருக்காது. ஆனால் பள்ளிகள் திறந்த நேரத்தில் அந்த சாலையில் பணியை தொடங்கி உள்ளனர். இத்தனைக்கும் இந்த பகுதி அமைச்சர் நேருவின் தொகுதி. அப்படி இருந்தும் பணிகள் இப்படி நடப்பதால் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
உடனடியாக இந்த சாலை பணியை முடிக்காவிட்டால் வரும் திங்கட்கிழமை பெற்றோர் மற்றும் குழந்தைகள் இந்த சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். அதற்குள் இந்த பணியை மாநகராட்சி செய்து முடிக்குமா, அல்லது திங்கட்கிழமை போராட்டம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.